கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம் தொடர்பான நிலைப்பாட்டை பொறுத்தே அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை ஆதரிப்பதா, எதிர்ப்பதா என தீர்மானிக்கப்படும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்துக்கு எதிராக கொண்டுவரப்படுகின்ற நம்பிக்கையில்லாப் பிரேரணை குறித்து பேசப்படுகிறது. இந்நிலையில், தமிழ் தேசியக் கூட்டமைப்பாகிய நாங்கள் பலதரப்பட்ட அழுத்தங்களை அரசாங்கத்துக்கு கொடுக்க இருக்கிறோம். இதில் முக்கியமாக கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரமுயர்த்தப்படுகின்ற விடயத்தில் காத்திரமான அழுத்தத்தை இந்த அரசாங்கத்துக்கு கொடுக்கவுள்ளோம்.
நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவு வழங்குவதா, இல்லையா என கல்முனை வடக்கு பிரதேச செயலகம் சார்ந்த விடயமே தீர்மானிக்கின்ற சக்தியாக இருக்கப்போகின்றது. கல்முனை வடக்கு பிரதேச செயலகம் சார்ந்த பிரச்சினைகளைத் தாண்டி வடக்கு கிழக்கு தமிழர்களின் பிரச்சினைகளையும் எடுத்துக்கூறி அவற்றையும் நடைமுறைப்படுத்தாமல் இந்த அரசாங்கம் தவிர்க்குமானால் அவர்களுக்கெதிராக சில நடவடிக்கைகளை எடுக்க நேரிடும்.
விசேடமாக நாங்கள் உரிமை சார்ந்த விடயங்களை முன்னெடுக்கின்ற அதேவேளை அபிவிருத்தி சார்ந்த விடயங்களையும் சமகாலத்தில் மேற்கொண்டு வருகிறோம். நாங்கள் ஒருபோதும் மாற்று சமூகத்திற்கு அடிமையாக இருக்க முடியாது. தமிழர்கள் வீரத்தோடு பிறந்தவர்கள். தமிழ் தேசியத்தின் மீதும் தமிழின் மீதும் பற்றுறுதிகொண்டவர்களாக எப்போதும் இருக்க வேண்டும்” என அவர் தெரிவித்தார்.