நாட்டில் அண்மையில் நடைபெற்ற குண்டுவெடிப்புத் தாக்குதல்களுக்கு காரணம் சட்டத்தை மீறி நடப்பவர்களை இலங்கை அரசு கண்டிக்கத் தவறியதே என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடைபெற்ற நிகழ்வொன்றுக்கு பிரதம அதிதியாக கலந்த கொள்வதற்கு சென்ற போது தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார். அதன்போது செய்தியாளர்களிடம் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.
அங்கு தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
இவ்வருட இறுதியில் இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ளது. அந்தத் தேர்தல் மிக முக்கியமான தீர்மானமிக்க தேர்தலாக அமையவுள்ளது.
இந்தத் தேர்தலில் தமிழ்பேசும் மக்கள் எவ்வாறான தீர்மானத்தை எடுக்கப்போகின்றார்கள் என்பதைப் பொறுத்துத்தான் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான முடிவுகள் நிச்சயிக்கப்படும் என்ற பின்னணி காணப்படுகின்றது.
இதன் பின்னணியில் அண்மையில் நடைபெற்ற தாக்குதல் சம்பவங்கள் மற்றும் தற்போது இலங்கையில் முன்னெடுக்கப்படுகின்ற பெரும்பான்மைத் தீவிரவாதம் குறித்தும் கலந்துரையாடினோம் எனவும் தெரிவித்திருந்தார்.