சகல மாகாண சபைத் தேர்தல்களையும் ஓரே தினத்தில் நடத்தக் கூடியதாக முன் வைக்கப்பட்டுள்ள உத்தேச அரசியலைமைப்பு 20வது திருத்தத்திற்கு எதிராக கிழக்கு மாகாண சபையில் தனி நபர் பிரேரனையொன்று முன் வைக்கப்பட்டுள்ளது. இந்த திருத்தம் தொடர்பான சட்ட மூல வரைபு வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.
மாகாண சபை இம்மாத அமர்வுக்காக எதிர்வரும் 29ம் திகதி கூடுகின்றது. அன்றைய அமர்வின் போது இந்த பிரேரனையை பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார் முன் வைத்துள்ளார்.
அந்த பிரேரனையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது-
அனைத்து மாகாண சபைத் தேர்தல்களையும் ஓரே நாளில் நடத்தும் வகையில் அரசியலமைப்பு 20வது திருத்தமும் மாகாண சபைகள் தேர்தல் சட்டத்தில் திருத்தமும் கொண்டு வர மத்திய அரசாங்கத்தின் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இது தொடர்பான சட்ட மூலம் வர்த்தமானி வர்த்தமானி அறிவித்தலும் வெளியிடப்பட்டுள்ளது.அரசியமைப்பு 20வது திருத்தத்தில் குறிப்பாக மாகாண சபைகளுக்கான தேர்தலை ஓரே நாளில் நடத்தும் வகையில் அதனை கலைக்கும் திகதியை பாராளுமன்றம் தீர்மானிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
ஜனநாயக விரோதமான முறையில் நாடாளுமன்றத்தின் கட்டுப்பாட்டில் மாகாண சபைகளை வைத்துக்கொள்ளவதற்கான முயற்ச்சியாகவே இதனை கருதவேண்டும். உத்தேச திருத்தம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டால் அடுத்த மாதம் பதவிக் காலம் முடிவடையவுள்ள கிழக்கு மாகாண சபை உள்ளிட்ட 3 சபைகளின் பதவிக் காலம் நீடிக்கும் வாய்ப்பு உள்ளது.
கிழக்கு மாகாண சபையின் தற்போதைய ஆட்சிக்கு மக்கள் வழங்கிய ஆணை 5 வருடங்களாகும். மக்கள் வழங்கிய ஆணைக்கு புறம்பாக சபையின் பதவிக் காலம் நீடிப்பு என்பது ஜனநாயக மரபு அல்ல.எனவே உத்தேச திருத்தங்களை ஜனநாயக விரோதம் செயலாக என சபை கருத வேண்டும் .உத்தேச திருத்தங்களை கைவிட்டு கிழக்கு மாகாண சபையின் பதவிக்காலம் முடிவடைந்த பின்னர் உரிய நேரத்தில் தேர்தல் நடைபெற வேண்டும் கிழக்கு மாகாண சபை அரசை கோருகின்றது." என அந்த பிரேரனை தெரிவிக்கின்றது.கிழக்கு மாகாண சபை யின் பதவிக் காலம் அடுத்த மாதம் 8ம் திகதியுடன் முடிவடையவிருக்கின்றது .என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.