அமெரிக்காவின் முதல் முஸ்லிம் பெண் நீதிபதியான ஷீலா அப்துஸ் சலாம் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். அவரது உடலை அமெரிக்காவின் ஹட்சன் ஆற்றிலிருந்து பொலிஸார் கண்டெடுத்துள்ளனர்.
நியூயோர்க்கின், ட்ரெயில்பேளசிங் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி வந்த ஷீலா அப்துஸ் சலாம் கடந்த வாரத்தில் காணாமல் போயுள்ளார். இவரை பொலிஸார் தேடி வந்த நிலையில், புதன்கிழமை மதியம் 1.45 மணியளவில் அவரது உடல் ஹட்சன் ஆற்றில் கரை ஒதுங்கியுள்ளது. இதையடுத்து சம்பவயிடத்திற்கு விரைந்து சென்ற பொலிஸார், சலாமின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
பெண் நீதிபதி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்தது, அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 65 வயதாகும் சலாம், அமெரிக்காவின் முதல் முஸ்லிம் பெண் நீதிபதி மற்றும் கருப்பின நீதிபதி என்ற பெருமைக்கு சொந்தக்காரர். மேலும் இவர் அமெரிக்காவின் உச்சநீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்து ஓய்வு பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அவர் உயிரிழந்ததற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என்பதோடு இந்த சம்பவம் குறித்து நியூயோர்க் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.