அரச மருத்துவ பல்கலைக்கழகம் அல்லது தனியார் மருத்துவ கல்லூரி என்பவற்றுக்கு ஒரு மாணவன் பிரவேசிக்க வேண்டுமானால் குறைந்த பட்சம் க.பொ.த. உயர்தரப் பரீட்சை விஞ்ஞான துறையில் 2A, சித்திகளையும், 1B. சித்தியையும் பெற்றிருக்க வேண்டும் என இலங்கை மருத்துவ சபை அறிவித்துள்ளது.
மருத்துவ பீடமொன்று பெற்றிருக்க வேண்டிய குறைந்தபட்ச தகைமைகள் அடங்கிய அறிக்கையில் மேற்குறித்த இந்த முன்மொழிவை முன்வைத்துள்ளது.
வைத்திய பீடமொன்றுக்கு அனுமதிக்கப்படும் மாணவர் ஒருவர் பெற்றிருக்க வேண்டிய இந்த குறைந்தபட்ச தகைமை கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் நிபந்தனையிடப்பட்டிருந்ததாகவும் அச்சபை மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.
இம்முறையும் குறித்த இந்த சட்டத்தில் எந்தவொரு மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லையெனவும் இலங்கை மருத்துவ சபை தெரிவித்துள்ளது.
தற்பொழுது, தயாரித்துள்ள மருத்துவ சபையின் தர நிர்ணயம் தொடர்பான அறிக்கை அடுத்த வாரம் நாட்டிலுள்ள 8 மருத்துவ பீடங்களின் சபையிடம் முன்வைக்கப்படவுள்ளதாகவும் இலங்கை மருத்துவ சபையின் பேச்சாளர் ஒருவர் மேலும் கூறியுள்ளார்.