பாகிஸ்தானில், மசூதி ஒன்றில் தீவிரவாதிகள் புகுந்து நடத்திய தாக்குதலில் 70 பேர் பரிதாபமாக பலியாகினர். மேலும் 150க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
பாகிஸ்தானின் தெற்கே சிந்து மாகாணத்தில் உள்ள செவான் நகரில் அமைந்துள்ள லால் ஷாபாஸ் மசூதியில் ஒவ்வொரு வியாழக்கிழமையும் இரவு வழிபாடு முடிந்த பிறகு சிறப்பு கலைநிகழ்ச்சிகள் நடைபெறும். அதேபோல் நேற்றிரவும், தொழுகைக்குப் பின்னர் கலைநிகழ்ச்சிக்காக ஆண், பெண் உட்பட 500க்கும் மேற்பட்டோர் கூடியிருந்தனர்.
அப்போது திடீரென பெண் இருந்த பகுதிக்கும் நுழைந்த தீவிரவாதி ஒருவர், தனது உடலில் கட்டியிருந்த சக்திவாய்ந்த குண்டை வெடிக்கச் செய்தார். இதில் அங்கிருந்த 70 பேர் உடல் சிதறி பலியாகினர். 150க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
தாக்குதலுக்குப் பிறகு ஒரே புகை மண்டலமாகக் காட்சியளிக்கும் பகுதியில் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. படுகாயமடைந்தவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.