முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவே இலங்கையின் அடுத்த ஜனாதிபதி எனவும், அந்த தகுதி அவருக்கு மாத்திரமே இருப்பதாகவும், வெகு விரைவில் அவர் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவார் என்றும் உடுவே தம்மாலோக தேரர் தெரிவித்துள்ளார். யப்பானில் கோத்தாபய ராஜபக்ஷ தலைமையில் நேற்று இடம்பெற்ற பௌத்த சமய நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
“பெளத்தத்திற்காக குரல் கொடுத்து அதனை பாதுகாத்து சிங்களவர்களை காப்பாற்றும் ஒருவர் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ மட்டுமே. பௌத்தத்தை காக்க பாடுபடுகின்ற அதேவேளை சிங்கள இனத்தை பாதுகாக்கின்ற ஒருவரே நாட்டின் அடுத்த தலைவராக வரமுடியும். அந்த வகையில் முழு சிங்களத்தையும் காத்துக் கொண்டு வரும் ஒருவர் முன்னாள் பாதுகாப்பு செயலாளர். முழுமையானதோர் சிங்களவராக பௌத்தனான வலம் வந்து கொண்டிருக்கும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் சாதாரண மனிதர் அல்ல சிங்களவர்களை காக்க பாடுபடும் மாமனிதர்.
இப்போது போலவே எதிர் காலத்திலும் சிங்களவரே எழுக பௌத்தனே எழுக என பௌத்தத்திற்காக அவர் குரல் கொடுப்பார் என்று நாம் முழுமையாக நம்புகின்றோம். அதன் படி எதிர்காலத்தில் ஜனாதிபதியாகக் கூடிய தகுதி கோத்தபாயவிற்கு மட்டுமே உண்டு. நிச்சயமாக அவர் இலங்கையில் ஜனாதிபதியாக கூடிய விரையில் பதவி ஏற்பார். அப்படி அவர் பதவி ஏற்கும் போது இலங்கையில் ஸ்ரீ மஹா போதியில் இருந்து ஓர் புத்தர் சிலையை யப்பானில் நிறுவவேண்டும் இதனை நீங்கள் மறுக்கமாட்டீர்கள் என்பது நிச்சயம். நீங்கள் ஜனாதிபதி ஆனவுடன் இந்த வேண்டுகோளை நிறைவேற்றுவீர்கள் என்ற ஆவலுடன் நாம் காத்திருக்கின்றோம்” எனவும் நம்பிக்கை வெளியிட்டார்.